நல்லதை நினைத்தால் மரணமும் எட்டி ஓடும்

Archive for the ‘உளவியல்’ Category

‘இது மற்றப் பக்கத்தைவிடப் பெரிசாக இருக்கிறது’ என்றாள் அவள்.
கலந்தாலோசனையை முடித்துக் கொண்டு  வெளியேற எழுந்தபோதுதான் அப்படிச் சொன்னாள். காய்ச்சல், சளி இருமலுக்காக மருந்தெடுக்க வந்திருந்தாள் அந்தப் பள்ளி மாணவி.
தனது வலது கையைச் சுட்டிக் காட்டுவது கண்ணில் பட்டபோது, அடுத்த நோயாளி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“அப்படி இருப்பது இயற்கைதானே. அதிகம் உபயோகிக்கும் கை மற்றதைவிட சற்று மொத்தமாக இருக்கும்” என ஆறுதல் சொல்லி அனுப்பி வைததுவிட்டு அடுத்தவர் பிரச்சனையில் மூழ்கினேன்.
“மூக்கு சற்று வளைவாக இருப்பதாக” அதே பெண் அடுத்த முறை வந்து சொன்ன போது சற்று உசாரானேன். அவளது முகத்தில் சற்று வாட்டம் இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
சற்று ஆறுதலாகப் பேசிய போது அவளுக்கு தனது தோற்றம் பற்றிய தற்குறை இருப்பதை உணர்ந்தேன்.
தனது உடற்தோற்றம், அழகு, கவர்ச்சி போன்றவை பற்றிய அக்கறை பதின்ம வயதினரிடையே ஏற்படுவது சகசம்.
  • ஒரு பக்க மார்பு பெரிசாக எனப் பெண்களும்
  • அல்லது ஒரு பக்க விதைப்பை பெரிசாக எனப் பையன்களும் கவலைப்பட்டுக் கொண்டு வருவது அதிகம்.
  • தான் உயரமாக அல்லது குள்ளமாக இருப்பதான உணர்வு,
  • தனது நிறம் குறைவாக இருப்பதாக எண்ணல் இப்படிப் பல.
  • தமது சருமம் மிருதுவாக இல்லை,
  • தனது குரல் கரகரக்கிறது.
  • தனது பல் சற்று பழுப்பு நிறமாக இருக்கிறது.
  • தலைமுடி கொட்டுகிறது.
  • நகம் அசிங்கமாக இருக்கிறது.
இவ்வாறெல்லாம் தமது உடல் பற்றிய மறையான சிந்தனைகள் ஏற்படலாம்.
இப்படியான எண்ணங்கள் உங்களுக்கும் ஏற்பட்டால் அது பற்றி கவலைப்படவோ வெட்கப்படவோ வேண்டாம். நீங்கள் மட்டுமல்ல நிறையப்பேருக்கு இத்தகைய சிந்தனைகள் வருவதுண்டு.
ஆனால் அவ்வெண்ணத்தை மாற்றி மகிச்சியை கைப்பிடிக்க வேண்டும்.

மனத்தாக்கம் ஏற்படலாம்
தனது உடல் பற்றிய எண்ணங்களுக்கும் சுயமதிப்பீடுகளுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. தனது உடல் அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறது என எண்ணுபவருக்கு தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனலாம். தாழ்வு மனப்பான்மை என்பதும் இதனோடு தொடர்புடையதே.
  • முதலில் குறிப்பிட்ட பெண்ணுக்கு தனது உடற்தோற்றம் பற்றிய திருப்தியின்மையானது மனச்சோர்வாக மாறியிருந்தது.
  • அதேபோல ஒவ்வொருவரும் தமது தோற்றம் பற்றிய தாழ்வுமனப்பான்மை உளம் சார்ந்த நோய்களாக மாறாது தடுப்பது அவசியம்.
அதற்கான துடுப்பு அவரவர் கைகளிலேயே இருக்கிறது.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
அப்படியான மறைஎண்ணம் (Negative Thoughts) வந்தால் நீங்கள் செய்யக் கூடியது என்ன?
உங்களிடம் உள்ள தனிச்சிறப்புகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பியுங்கள்.
  • நிறம் கறுப்பாக இருந்தாலும் உங்கள் கண்கள் கவர்ச்சியுடையனவாக இருக்கலாம்.
  • சிரிக்கும் ஏதோ ஒரு மோகனம் மற்றவர்களை ஈர்க்கலாம்.
  • அல்லது உங்கள் உரையாடல் திறன் மற்றவர்கள் உங்களோடு மனம் திறந்து பேச வைக்கலாம்.
  • விளையாட்டு, சமையல், கையெழுத்து
இப்படி ஏதாவது ஒரு சிறப்பு அல்லது பல சிறப்புகள் உங்களிடத்தில் மறைந்து கிடக்கலாம். அவற்றைக் கண்டு பிடியுங்கள். கண்டு பிடித்ததை மெருகூட்டுங்கள். மனம் மகிழ்ச்சியில் ஆளும்.
சிறப்புகளை மீள நினைத்தல் நன்று
உங்கள் சிறப்புகளை நினைத்துப் பார்ப்பதுடன் நின்றுவிடாது அவை பற்றி குறிப்புகள் எழுதி வைப்பது இன்னும் மேலானது.
எழுதத் தவறிவிட்டாலும், தினமும் உங்களை மகிழ்வுறச் செய்த சம்பவங்களை படுக்கைக்கு சென்று தூங்கு முன்னர் இரை மீட்டிப் பார்ப்பதுவும் சுயபிம்பத்தை உயர்த்தக் கூடியதாகும்.
தினமும் குறைந்தது மூன்று மகிழ்வூட்டிய நிகழ்வுகளையாவது நினைவுபடுத்துங்கள்.
உதாரணத்திற்கு
  • நீங்கள் கூறிய விடைக்கு ஆசிரியர் திருப்தி எனச் சொல்லியிருக்கலாம்.
  • உங்களுக்கு விடை தெரிந்திருந்தும், விடையளிக்க முன் வேறொருவர் சொல்லிப் பாராட்டைப் பெற்றிருந்தாலும்
  • விடை தெரிந்ததை உங்களுக்குக் கிடைத்த வெகுமதியாக எண்ணி மகிழுங்கள்.
“அட நான் சொல்லாமல் விட்டுவிட்டேனே” எனக் கவலைப்படுவது கூடவே கூடாது.
உங்களது உடை, அல்லது நீங்கள் தயாரித்த உணவு, அல்லது நீங்கள் சொன்ன ஜோக் மற்றவர்களைக் கவர்ந்திருக்கும்.
  • உங்கள் வெற்றிகளை நினைவுபடுத்துங்கள்.
  • அவற்றை உங்களுக்குக் கேட்குமாறு வாய்விட்டு உரத்துச் சொல்லுங்கள்.
  • அல்லது உங்கள் பெற்றொர், அண்ணன், அக்கா அல்லது உங்களைப் புரிந்து கொண்ட ஒருவருடன் பகிர்ந்து மகிழுங்கள்.
இவை யாவுமே உங்களைப் பற்றிய உங்கள் சுயபிம்பத்தை உயர்த்த உதவும்.
உங்களுக்குள் ஏதோ ஒரு அழகு ஒளிந்திருக்கிறது. உங்களின் மனது மற்றவர்களைக் கவருகிறது. உங்களுக்கு மட்டுமே தனித்துவமான ஏதோ ஒரு ஆற்றல் அழகு குணம் குடிகொண்டிருக்கிறது.
அதை நினையுங்கள். அதையிட்டுப் பெருமைப்படுங்கள். மேலும் வளருங்கள்.
ஒளிமயமான எதிர்காலம் உங்கள் வரவிற்காகக் காத்திருக்கிறது. பயன்படுத்தாது தப்ப விட்டுவிடாதீர்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
ஹாய் நலமா புளக்கில் முன்பு வெளியான எனது கட்டுரை
0.0.0.0.0.0
உங்கள் மனைவி சந்தோஷமாக இருக்கிறாரா?
இல்லையென்றால் அவரை மகிழ்வுறுத்துவதற்கு வழி என்ன?
சிந்திப்போம்!
அந்த ஜயா மிகவும் வசதியானவர்.
மனைவியில் மிகுந்த அன்பு கொண்டவர். அவவிற்கு சிறிய வருத்தம் என்றால் கூட அலட்சியம் பண்ண மாட்டார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துப் போவார்.
தேவையான பரிசோதனைகளையெல்லாம் அலுக்காமல் செய்வார். மருந்துகள், சத்து மருந்துகள் எல்லாம் வாங்கிக் கொடுப்பார்.
ஆயினும், மனைவியின் முகத்தில் சந்தோஷத்தைக் காண முடிவதில்லை.
மற்றவர் அவ்வளவு வசதியானவர் அல்ல.
ஆயினும், தனது மனைவியின் சௌகர்யத்திற்காக தனது தகுதிக்கு மேல் போய் எல்லாம் வாங்கிக் கொடுப்பார். ரி.வி., பிரிட்ச், மைக்ரோ அவன், வோஷிங் மெசின், பிரஸர் குக்கர் என எது தேவையென்றாலும் கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுப்பார். ஆயினும், அவராலும் மனைவியின் மனதைக் கவர முடியவில்லை. வேறு என்ன செய்வது என அங்கலாய்க்கிறார்.
இன்னுமொருவர், மனைவியின் திருப்தியின்மைக்குக் காரணம் அவளது தனிமையும் பொழுதுபோக்கின்மையும்தான் என நம்பி நீண்ட லீவு போட்டுவிட்டு கோயில், குளம், சுற்றுலா, வெளிநாட்டுப் பயணம் என பலதும் முயன்றுவிட்டார். ஆயினும் எதுவித முன்னேற்றமும் இல்லை.
இப்பெண்கள் எல்லாம் எதிலும் திருப்தியடையாத தாழ்ந்த மனம் கொண்டவர்களா? இல்லை!
கணவர்களின் அணுகு முறையில்தான் ஏதோ தவறு இருக்க வேண்டும்.
லெபனானின் பெய்ரூடடில் செய்யப்பட்ட ஆய்வு உங்களுக்கு உதவலாம். 1,650 திருமணமான தம்பதியர்களிடையே செய்யப்பட்ட ஆய்வு அது.
  • வீடு கூட்டுதல்,
  • தூசி தட்டுதல்,
  • உடுப்பு தோய்த்தல்,
  • சமையல், தேனீர் தயாரித்தல்,
  • படுக்கையை சுத்தம் செய்தல்,
  • பாத்திரம் கழுவுதல்
போன்ற இருபத்தைந்து நாளாந்த வீட்டு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.
வீட்டு வேலைகளில் கணவன் எந்த அளவுக்கு உதவுகிறான் என்பதையும் மனைவியின் மன நிலை, குடும்ப வாழ்வில் அவளது திருப்தி அல்லது திருப்தியின்மை, அவளது கவலை போன்றவற்றோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்த்தார்கள்.
வீட்டு வேலைகளில் மிகக் குறைந்தளவே பங்களித்த கணவன்மாரின் மனைவிகள் கூடுதலாகப் பங்களித்தவர்களின் மனைவிகளைவிட,
  • 1.6 விகிதம் உள நெருக்கடியில் இருந்தார்கள்.
  • 2.96 விகிதம் கணவனோடுடனான உறவில் அசௌகரியப்படுவதாக உணர்ந்தார்கள்,
  • 2.69 விகிதம் கூடுதலான கவலையோடு இருந்தார்கள்.
“வீட்டு வேலைகளில் கணவன் ஈடுபடுவதற்கும்,
மனைவியின் மன ஆரோக்கியத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை
இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது”
என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தும்புத்தடியில் ஆரம்பியுங்கள்.
வீடு கூட்டுவதில் ஆரம்பித்து
ஏனைய வீட்டு வேலைகளிலும்
பங்கு பற்றுங்களேன்,
மனைவி மகிழ்வார்.
வீட்டில் என்றும் வசந்தம்தான்!
தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்து எனது ஹாய் நலமா வலைப்பூவில் 4 வருடங்களுக்கு முன் பதிவேற்றிய கட்டுரை.
>எதிலும் நல்லதை நினைத்தால் மரணமும் எட்டி ஓடும்
‘எப்பொழுதும் நல்லதை எண்ணுங்கள்,

நல்லதைப் பேசுங்கள்,

நல்லதையே செய்யுங்கள்.
வாழ்வில் அவநம்பிக்கை கொள்ளாதீகள்.
எதையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.
மறை எண்ணங்கள் வேண்டாமே.
நல்லதை நினைத்தால்,

வாழ்வை நம்பிக்கையோடு எதிர் கொண்டால்

வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

நீடித்த வாழ்வு கிட்டும்.’
இவ்வாறு சொல்லாத அறிஞர் அல்லது ஞானிகள் இருக்க முடியாது.
ஆனால் எவர் எதைச் சொன்னாலும், எத்தனை தடவைகள் இத்தகைய நல்ல வார்த்தைகளைக் கேட்டாலும் எமது குரங்கு மனம் அடங்குவதில்லை. மறை எண்ணம் கொண்டு கவலையுறவே செய்யும்.
ஆனால் விஞ்ஞான ரீதியாகச் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இது வெற்று நம்பிக்கையல்ல, நிரூபிக்கப்படக் கூடிய உண்மையும் கூட என்ற நம்பிக்கையைத் தருகிறது.
பெண்களில் செய்யப்பட்ட இந்த ஆய்வானது அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்ற நம்பிக்கை உணர்வு கொண்ட பெண்களுக்கு (Optimistic women) மாரடைப்பு வருவதற்கான சாத்தியமும், வேறு காரணங்களால் மரணம் வருவதற்குமான வாய்ப்பும் குறைவு என்கிறது.


மாறாக நடப்பவை எதிலும் நம்பிக்கையற்று, மற்றவர்களில் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொள்ளும் (pessimistic women)பெண்களுக்கு மரணம் விரைவில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
இருந்தபோதும் அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பில் மாற்றம் இருக்கவில்லை என மேலும் சொல்கிறது அந்த ஆய்வு.


மாதவிடாய் முற்றாக நின்றுவிட்ட 50 வயது முதல் 79 வயதுவரையான 97,253 பெண்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலமே இந்த முடிவுகள் எட்டப்பட்டன.
மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் நம்பிக்கையுணர்வுள்ள பெண்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 9 சதவிகிதத்தாலும், ஏனைய காரணங்களால் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 14 சதவிகிதத்தாலும் குறைந்திருந்தது.
ஆனால் நம்பிக்கை வரட்சி கொண்ட பெண்களில் மரணம் அடைவதற்கான வாய்ப்பு 16 சதவிகிதத்தால் அதிகரித்திருந்தது.
நம்பிக்கை உணர்வுக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பில் இனத்திற்கும் (Race) பங்கு உண்டாம். நம்பிக்கையுணர்வுள்ள ஆப்பிரிக்க அமெரிக்க பெண்கள் அடுத்த 8 வருடங்களில் மரணிப்பதற்கான வாய்ப்பு 33 சதவிகிதம் குறைவாக இருந்ததாம். ஆனால் அதே கால இடைவெளியில் வெள்ளையினப் பெண்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு 13 சதவிகிதம் மட்டுமே குறைவாக இருந்ததது.
பொதுவாக நம்பிக்கை உணர்வு கொண்டவர்களிடம் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு, மனச் சோர்வு அறிகுறிகள் போன்றவை குறைவாகவே இருப்பதுண்டு.
அத்துடன் புகைத்தல், மற்றும் உடலுழைப்பின்றி சோம்பேறி வாழ்க்கை வாழ்தல் ஆகியவையும் அதிகம் காணப்படுவதில்லை.
இவற்றைக் கணக்கில் எடுத்த போதும், நம்பிக்கை உணர்வுள்ளவர்களிடையே மாரடைப்பு மற்றும் விரைவில் மரணம் அடைதல் ஆகியன குறைவாகவே இருந்தததாக ஆய்வு செய்தவர்கள் தெளிவுபடுத்தினர்.
இது பெண்களுக்கான ஆய்வுதானே என்று எண்ண வேண்டாம்.
சில வருடங்களுக்கு முன் ஆண்களில் டச் மருத்துவர்களால் செய்யப்பட்ட ஆய்வும் இதே முடிவையே கொண்டிருந்தன என்பது குறிபிடத்தக்கது.
எனவே எல்லோருக்கும் பொருந்தும்.
ஓப்பிட்டு ரீதியாகப் பார்க்கும் போது

வயதில் குறைந்தவர்கள்,

கல்வியறிவு அதிகமுள்ளவர்கள்,

பொருளாதார ரீதியாக வசதியுள்ளவர்கள்,

சமய நிகழ்வுகளில் வாரம் ஒரு முறையாவது கலந்து கொள்பவர்களிடையே நம்பிக்கை உணர்வு அதிகம் இருந்ததையும் இந்த ஆய்வில் கண்டறிந்தார்கள்.


எனவே எமது வாழ்நாளை அதிகரிப்பதற்கு வாழ்விலும் எதிர்காலத்திலும் நம்பிக்கை உணர்வை வளர்ப்பது அவசியமாகிறது.
நீண்ட நாள் வாழ்வதற்காக மட்டுமின்றி மகிழ்ச்சியுள்ள பயனுறு வாழ்வாக அமைவதற்கும் அதே நம்பிக்கை உணர்வுதானே காரணமாகிறது.
அழு மூஞ்சியை கழுவித் துடைத்து எறிந்து விட்டு நம்பிக்கையோடு புன்னகைக்கும் வதனமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
அது சரி. கீழே உள்ளவரின் நம்பிக்கையும் நேர் எண்ணத்தில் (Positive Thinking) அடங்குகிறது அல்லவா?
இவர்களை எந்த இடத்தில் சேர்த்துக் கொள்வது?

Referance: https://goo.gl/tVdwUK

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்