ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு


Acharakovai


ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். இதன் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார். 


நூல்


ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)

நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து.
1


தனக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இன்சொல்லும், எல்லா உயிர்க்கும் இன்னாதன செய்யாமையும், கல்வியும், ஒப்புரவை மிக வறிதலும், அறிவுடைமையும், நல்லினத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும் நல்லோராற் சொல்லப்பட்ட ஆசாரங்கட்குக் காரணம். 

கருத்துரை: நன்றியறிதல் பொறையுடைமை முதலிய எட்டும் நல்லொழுக்கங்கட்குக் காரணம். 

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)

பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.
2


நற்குடிப் பிறப்பு, நெடிய வாணாள், செல்வம், அழகுடைமை, நிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி, நோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் இலக்கணத்தோடு நிரம்பப் பெறுவர் என்றும் ஆசாரம் தப்பாமல் ஓழுகுவார். 

கருத்துரை: ஒழுக்கந் தவறாதவர்கள் மேற்கூறிய எட்டு வகையையும் எய்துவர். 

தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும்.
3


குரவர்க்குத் தக்கணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவஞ்செய்தலும், கல்வியும் என்ற இந்நான்கினையும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு பாதுகாத்துச் செய்துவருக. மாறுபடுமாயின் எவ்வுலகத்தின்கண்ணும் தனக்குப் பயனாகாவாய் இந்நான்கும் கெடும். 

கருத்துரை: தக்கணை முதலியவைகளைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்கவேண்டும். 

முந்தையோர் கண்ட நெறி
(இன்னிசை வெண்பா)

வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை.
4


வைகறையாகிய பின்யாமத்திலே துயிலெழுந்து தான் பிற்றைஞான்று செய்யும் நல்லறத்தையும் ஒள்ளிய பொருட்கு வருவாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, பின்னைக் கங்குல் புலர்ந்தால் பழுதின்றித் தந்தையையும் தாயையும் தொழுதெழுந்து ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குக என்று சொல்லப்படும் ஒழுக்கம், அறிவுடைய பழையார் சொல்லிய முறைமை. 

கருத்துரை: மறுநாட் செய்யப்புகுங் காரியத்தை வைகறையிலெழுந்து சிந்தித்துப் பின் பெற்றோரை வணங்கி அச்செயலைத் தொடங்குக. 

எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.
5


பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலையோடே கூட இவையிற்றை எச்சிலையுடையராய் யாவரும் தீண்டார் என்று சொல்லுவர்; எல்லோரும் யாப்புற எச்சிலோடு தீண்டப்படாத பொருளும் இவை. 

கருத்துரை: பசு முதலிய ஐந்து பொருள்களை எவரும் எச்சிலுடன் தீண்டலாகாது. 



எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து.
6


புலையும் திங்களும் நாயிறும் நாயும் அழகிய வீழ்மீனோடு சொல்லப்பட்ட ஐந்தினையும் எச்சிலை யுடையார் விரைந்து தெளிய நாளும் கண்ணால் நோக்கார் நன்கறிவார். 

கருத்துரை: நன்கறிவார் புலை முதலிய ஐந்தையும் கண்ணாற் காணார். 

எச்சில்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு.
7


எச்சில்கள் பல உள. அவற்றுள் மல மூத்திரங்கள் இயங்கிய இயக்கம் இரண்டொடு கூட இணைவிழைச்சும் வாயினால் வழங்கிய விழைச்சும் ஆகிய இவ்வெச்சில் நான்கினையும் பாதுகாக்க. 

கருத்துரை: பலவகை எச்சில்களில் மலசலங் கழித்தல் புணர்ச்சி அதரபானம் இந்நான்கையும் காக்க. 

எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே, - எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார்.
8


கூறப்பட்ட இந்நான்கு எச்சிலையும்மிகக் கடைப்பிடித்து ஒன்றனையும் ஓதார்,வாயாலொன்றைச் சொல்லார், கண் துயிலார் எஞ்ஞான்றும்மதியுடையவராக வேண்டுவோர். 

கருத்துரை: நால்வகை எச்சிலு முண்டானவிடத்து ஒன்றும் படித்தலாகாது, வாயா லொன்றையுஞ் சொல்லலாகாது,தூங்கலாகாது. 

காலையில் கடவுளை வணங்குக!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி.
9


சிறு காலையின்கண் ஒரு கோலாலே பற்றுடைத்துக்கண்கழுவித் தான் வணங்குந் தெய்வத்தைத் தானறியும்நெறியால் தொழுக. மாலைப்பொழுதின்கண் தான் வணங்குந்தெய்வத்தை நின்று தொழுதல் குற்றமாம்; இருந்து தொழுக. 

கருத்துரை: விடியற்காலத்தில் பல் துடைத்துச் சுத்தஞ்செய்து கடவுளை வழிபட்டுப் பின் ஒரு கருமஞ்செய்க.மாலைக் காலத்தில் வீற்றிருந்தே கடவுளை வழிபடுக. 

நீராட வேண்டிய சமயங்கள்
(பஃறொடை வெண்பா)

தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்!
10


தன்னால் வணங்கப்படுந் தேவரை வழிபடுதற்கண்ணும், தீக்கனாக் கண்டவிடத்தும், தூய்மையின்மையுண்டானவிடத்தும், உண்டதனைக் கான்றவிடத்தும்,மயிர்களைந்தவிடத்தும், உண்ணும்பொழுதும், பொழுதேறஉறங்கிய விடத்தும், இணைவிழைச்சு உண்டாயின விடத்தும்,கீழ்மக்கள் உடம்பு தீண்டியவிடத்தும், மூத்திரபுரீடங்கள் கான்றவிடத்தும் என இப்பத்திடத்தும்ஐயுறாதே நீராடுக. 

கருத்துரை: கடவுள் வழிபாடு முதலியபத்துச் சமயங்களிலும் இன்றியமையாது நீராடல் வேண்டும்.


பழைமையோர் கண்ட முறைமை
(இன்னிசை வெண்பா)

உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே
முந்தையோர் கண்ட முறை.
11


ஒன்றனை யுடுத்தல்லது நீராடார், இரண்டுஉடுத்தன்றி ஒன்றுடுத்து உண்ணார், உடுத்த ஆடையை நீரின்கண்பிழியார், சீர்மை தக்கார் ஓராடையையுடுத்து அவையின்கண்செல்லார் என்று சொல்லப்படுவது பழமையோர் கண்டமுறைமை. 

கருத்துரை: நீராடல் உண்ணல் அவை புகல் ஆகிய காலங்களில்உடையுடுத்த வேண்டிய முறையில் உடுத்துக. 

செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து.
12


தலையின்கண் தேய்த்த எண்ணெயால் யாதோர் உறுப்புந் தீண்டார், பிறர் உடுத்த அழுக்காடையும் தீண்டார், பிறர் தொட்ட செருப்பும், பிறர் இரந்து தமக்குக் காரியமென்று வேண்டிக் கொள்ளினுங் கொள்ளார் 

கருத்துரை: தலையிற்றேய்த்த எண்ணெயை வழித்து மற்ற உறுப்புக்களிற் பூசுதல், அடுத்தவராடையைத் தீண்டுதல் முதலியன செய்தலாகாது. 

செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)

நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை.
13


நீரின்கண் தம் நிழலை விரும்பி நோக்கார். நிலத்தை இருந்து கீறார், இரவின்கண் ஒரு மரத்தின் கண்ணும் சேரார், நோய் கொண்டு இடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே எண்ணெய் உடம்பின்கண் தேயார், அவ்வெண்ணெயைத் தேய்த்தபின் தம் உடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தம் கண்ணால் நோக்கார். 

கருத்துரை: தண்ணீரில் நிழல் பார்த்தல், சும்மா தரையைக் கீறுதல் முதலியன ஆகா. 

நீராடும் முறை
(இன்னிசை வெண்பா)

நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர்.
14


ஒரு முறைப்பட்டார் நீராடும் போழ்தின் கண் ஒருநாளும் நீந்தார். நீரின்கண் உமியார், நீரைக் குடைந்து திளையார், விளையாடுவதுஞ் செய்யார். எண்ணெய் பெறாது தலை காயந்ததெனினும் தலையொழிய நீராடார் ஆய்ந்த அறிவினார். 

கருத்துரை: குள முதலியவற்றில் நீராடுங்காலத்து நீந்துதல் எச்சிலுமிழ்தல் முதலிய அருவருக்கத்தக்க செயல்களைச் செய்யலாகாது. கழுத்துவரை குளிக்கலாகாது. 

உடலைப் போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும்.
15


நிலம் முதலாயின ஐம்பூதங்களையும் பார்ப்பாரையும் பசுக்களையும் திங்களையும் ஞாயிற்றையும் தன் உடம்பு போலக் கருதிப் போற்றா திகழ்வானாயின் தன் உடம்பின்கண் உள்ள ஐந்து பூதத்தையு முடைய தெய்வங்கள் அன்றே கெட்டகன்றுபோம். 

கருத்துரை: பஞ்ச பூதம் முதலியவைகளை இகழ்வானாயின் ஒருவன் உடம்பின்கணுள்ள ஐந்துபூதத்தையுடைய தெய்வங்கள் அன்றே நீங்கும். 


யாவரும் கூறிய நெறி
(சவலை வெண்பா)

'அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே-
யாவரும் கண்ட நெறி.
16


அரசனும் உவாத்தியும் தாயும் தந்தையும் தனக்கு மூத்தோனும் என இவர்கள் தமக்கு நிகரில்லாத குரவாவார். இவர்களைத் தேவரைப்போலத் தொழுதெழுக என்று சொல்லப்படுவது எல்லா நல்லாரும் உரைத்துச் சொல்லிய நெறி. 

கருத்துரை: அரசன் முதலிய ஐங்குரவரையும் தேவரைப் போலத் தொழுது எழுக. 

நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)

குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு.
17


முன்பு கூறப்பட்ட குரவர்கள் சொல்லிய சொல்லைக் கடந்து ஒன்றினையுஞ் செய்யார், முடியாது கிடந்த குறை விரதமுடையார் மிகவதனை மறந்தொழுகார், மதி நிறைந்த உவாவின் கண் தம் பல் துடைப்பதும் செய்யார், அவ்வுவாவின் கண் மரங்களையுங் குறையார் என்று சொல்லப்படுவது நல்லறிவாளர் தொழில். 

கருத்துரை: குரவர் சொற்கடந்து செய்தல், நிறையுவாவில் பல் துடைத்தல், மரங்குறைத்தல் முதலியவற்றைச் செய்யார் நல்லறிவாளர். 

உணவு உண்ணும் முறைமை
(இன்னிசை வெண்பா)

நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து.
18


குளித்துக் கால்கழுவி வாய்பூசி உண்ணுமிடம் மண்டலஞ் செய்து உண்டார் உண்டாராவர். இப்படிச் செய்யாமல் உண்டவர்கள் உண்டாரைப்போல வாய்பூசிப் போவார் ஊனை அரக்கர் எடுத்துக் கொண்டார். 

கருத்துரை: உண்கலத்தினின்றும் உணவை யெடுத்துண்ணு முன் நீராடல் கால் கழுவல் முதலியன செய்துண்பதே, உண்பதாம். 

கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!' என்பதே-
பேர் அறிவாளர் துணிவு.
19


கால் கழுவி நீர் உலர்வதற்கு முன்னே உண்ணத் தொடங்குக, பாயலின் கண் கால் கழுவிய ஈரம் புலர்ந்தாலன்றி ஏறாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு. 

கருத்துரை: கால் கழுவின ஈரங் காய்வதன் முன் உணவு கொள்க, கால் கழுவின ஈரங் காய்ந்தபின்னே பள்ளி ஏறுக. 

உண்ணும் விதம்
(இன்னிசை வெண்பா)

உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு!
20


உண்ணும்போது நோக்கப்படும் திசை கீழ்த்திசையாகக் கண் பொருந்தி, தூங்காது புடைபெயராது நன்றாக இருந்து, எவ்விடத்தும் பிறிதொன்றினையும் நினையாது, நோக்காது, சொல்லாது, உண்கின்ற உணவினைத் தொழுது சிந்தாமல் உண்க. 

கருத்துரை: உணவுட்கொள்வோன் கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கருத்துடையனா யுண்க. கிழக்கு மங்கலத் திசையாதலின் கிழக்கு நோக்கி எனப்பட்டது. 



ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்.
21


விருந்தினரும் மிக மூத்தோரும் பசுக்களும் சிறைகளும் பிள்ளைகளும் என்று சொல்லப்பட்ட இவர்கட்கு உணவு கொடுத்தல்லது உண்ணார் என்றும் ஒழுக்கம் பிழையாதார். 

கருத்துரை: விருந்தினர் முதலியவர்கட்கு உணவு கொடாமல் தாம் முன்னர் உண்ணலாகாது. 

பிற திசையும் நல்ல
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு.
22


முன் சொன்ன கீழைத்திசையும், அக்கீழைத்திசைக்கு இடையூறு உளதாயின் பின்னை நோக்கி யுண்டற்கு மற்றைத்திசைகளும் நல்லவாம். உச்சிப்பொழு துண்டலை ஆமெனப் புகழ்ந்தார்கள். முகட்டினேர் கட்டிலிட்டுக் கிடக்கலாகாதென்று பழித்தார்கள் நல்லோர். 

கருத்துரை: கிழக்கு நோக்கி யிருந்துண்ண இயலாதாயின் வேறுதிசை நோக்கியிருந்து முண்ணலாம். வாயிற்படிக்கு நேர் கட்டிலிட்டுப் படுக்கலாகாது. 

உண்ணக் கூடாத முறைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!
23


கிடந்துண்ணல் ஆகாது, நின்றுண்ணல் ஆகாது, வெள்ளிடையின் கண்ணிருந்து உண்ணல் ஆகாது, விரும்பி மிகவும் உண்ணல் ஆகாது, நெறியைக் கடந்து யாதொன்றும் நின்றுகொண்டு தின்னலும் ஆகாது. 

கருத்துரை: படுத்தோ நின்றோ வெளியிடையிலிருந்தோ உண்ணலாகாது, கட்டின்மேலிருந்துந் தின்னலாகாது. 

பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; - தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால்.
24


தம்மிற் பெரியார் தம் பந்தியிலிருந்து, உண்ணுமிடத்து அப்பெரியார் உண்பதற்கு முன்னே தாம் உண்ணார், முந்துற எழுந்திரார், அவர்களை நெருங்கியிரார், உண்ணுமிடத்து மிக எல்லாச் செல்லமும் பெறுவதா யிருப்பினும் வலமிருந்து உண்ணற்க. 

கருத்துரை: பெரியோர்களுட னிருந்துண்ணுங் காலத்து அவர்கட்கு முன் உண்ணலும் எழுதலும் முதலியன ஆகா. மிக்குறார் என்பது ‘மீக்கூறார் எனச் சொற்சிதைவாக்கி அதிகம் பேசார்' என்பதுமாம். 

கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,
துய்க்க, முறை வகையால், ஊண்.
25


கைக்குங் கறியெல்லாம் முடிவின்கண்ணாகவும், தித்திக்குங் கறியெல்லாம் முதலாகவும், ஒழிந்த சுவைகளுள்ள கறிகளெல்லாம் இடையாகவும் உண்க; புகழும் வகையான். 

கருத்துரை: உண்ணும்போது இனிப்பான கறிகளை முதலிலும், கசப்பான கறிகளை இறுதியிலும் ஒழிந்த சுவைக்கறிகளை இடையிலும் உண்க. 


உண்ணும்கலம்
(இன்னிசை வெண்பா)

முதியவரைப் பக்கத்து வையார்; விதி முறையால்
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து,
அன்பின் திரியாமை, ஆசாரம் நீங்காமை,
பண்பினால் நீக்கல், கலம்!
26


தம்மின் மூத்தார் உண்ணும்பொழுது, அம்மூத்தாரைத் தம் பக்கத்து வைத்து உண்ணார், முறைமையான் உண்ணுங்கலங்கள் எல்லாவற்றுள்ளும் சிறிய கலங்களைக் கடைப்பிடித்துத் தனக்குக் கைக்கொண்டு காதல் பிறழாத வகையும், ஒழுக்கத்தின் நீங்காத வகையும் உண்டு, வரைவோடு கூட உண்டமைந்தால் உள்ள கலங்களை முறைப்படி நீக்குக. 

கருத்துரை: தம்மின் முதியாரைத் தம் பக்கம் வைத்துண்ணாமலும் உண்கலங்களிற் சிறியவற்றைப்பற்றி அன்பும்ஒழுக்கமுங் குன்றாமலும் உண்டு பின் உண்கலங்களை நீக்குக. 

உண்டபின் செய்ய வேண்டியவை
(பஃறொடை வெண்பா)

இழியாமை நன்கு உமிழ்ந்து, எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தா
முக் கால் குடித்துத் துடைத்து, முகத்து உறுப்பு
ஒத்த வகையால் விரல் உறுத்தி, வாய்பூசல் -
மிக்கவர் கண்ட நெறி.
27


வாயில் புக்க நீர் உட்புகாமை மிகவும் உமிழ்ந்து, எச்சில் அறும்படி வாயையும் அடியையும் மிகத் துடைத்து, அழகுடைத்தாக முக்காற் குடித்துத் துடைத்து, முகத்தின்கண் உள்ள உறுப்புக்களை அவற்றுக்குப் பொருந்தும் வகையால் விரல்களை உறுத்தி, அப்பெற்றியானே பூசும் பூச்சு நெறிமிக்கவர் கண்ட நெறி. 

கருத்துரை: உண்டபின் வாயை நன்கு கொப்புளித்து, எச்சிலறச் சுத்தி செய்து முக்கால் குடிக்க. 

நீர் குடிக்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால்,
கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இரு கை
சொறியார், உடம்பு மடுத்து.
28


இரு கையால் முகந்தும் ஏற்றும் தண்ணீர் குடியார், குரவர் கொடுப்பனவற்றை ஒரு கையால் வாங்கிக் கொள்ளார்; அவருக்குத் தாம் ஒரு கையால் கொடார், உடம்பினை மடுத்து இரு கையால் சொறியார். 

கருத்துரை: தண்ணீரை இரு கையாலுங் குடிக்கலாகாது. பெரியோரிடம் ஒன்றைப் பெறும்பொழுதும் ஒன்றைக் கொடுக்கும்பொழுதும் இரு கையாலேயே வாங்கல் கொடுக்கல் செய்யவேண்டும். உடம்பை இரு கைகளாலும் சொறியலாகாது. 

மாலையில் செய்யக் கூடியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

அந்திப் பொழுது, கிடவார், நடவாரே;
உண்ணார், வெகுளார், விளக்கு இகழார்; முன் அந்தி
அல்கு உண்டு அடங்கல் வழி.
29


மாலைப்பொழுதின்கண் கிடத்தலும், வழி நடத்தலும் செய்யார்; ஒருவரைச் சீறுவதுஞ் செய்யார்; அந்திப் பொழுது விளக்கு இகழாது ஏற்றுவர்; மாலைப்பொழுதின்கண் உண்ணாது அல்கலின்கண் உண்டு, புறம்போகாது ஓரிடத்தின் கண்ணே அடங்குதல் நெறி. 

கருத்துரை: மாலைப்பொழுதில் படுத்தல் வழிநடத்தல் செய்யாதும், உண்ணாமலும் எவரையும் சீறாதும், விளக்ககேற்றி இரவானது முண்டு அடங்கியிருத்தல் முறை. 

உறங்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது,
வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள்
உடல் கொடுத்து, சேர்தல் வழி.
30


கிடக்கும்பொழுது தெய்வத்தைக் கைகூப்பித் தொழுது வடதிசையின்கண்ணும் கோணத்திசையின்கண்ணும் தலைவையாது, மேற்போர்ப்ப தொன்றினை உடம்பின் கண் கொடுத்துக் கிடத்தல் நெறி. 

கருத்துரை: படுக்கும்பொழுது கடவுளைத் தொழுது, வடக்கும் கோணத்திசையும் தலைவையாது,போர்த்துப்படுத்தல் முறை. 


இடையில் செல்லாமை முதலியன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இரு தேவர், பார்ப்பார், இடை போகார்; தும்மினும்,
மிக்கார் வழுத்தின், தொழுது எழுக! ஒப்பார்க்கு
உடன் செல்க, உள்ளம் உவந்து!
31


இருதேவர் நடுவும் பார்ப்பார் பலர் நடுவும் ஊடறுத்துப்போகார்; தும்மினபொழுது மிக்கார் வழுத்தினால் தொழுதெழுக; தம்மோடொப்பார்க்கு வழிபோம் பொழுது உடனே நேர் செல்க, தம்முள்ளம் உவந்து. 

கருத்துரை: இரண்டு தெய்வங்களுக்கும் பார்ப்பாருக்கும் இடையில் செல்லக்கூடாது. தும்மினபொழுது பெரியோர் வாழ்த்தினால் அவரைத் தொழுக. ஒத்த நண்பன் எதிர் வருவானானால் உடன் செல்க. 

மலம், சிறுநீர் கழிக்கக் கூடாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)

புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார்-உணர்வு உடையார்.
32


புல்லின் கண்ணும், விளைநிலத்தின்கண்ணும் ஆப்பியின்கண்ணும், சுடலையின்கண்ணும், வழியின்கண்ணும், தீர்த்தத்தின்கண்ணும். தேவர் கோட்டத்தின்கண்ணும். நிழலின்கண்ணும்; ஆநிரை நிற்கும் இடத்தின்கண்ணும் சாம்பலின்கண்ணும் என ஈரைந்தின்கண்ணும் உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் சோரார் உணர்வுடையார். 

கருத்துரை: புல் முளைத்திருக்குமிடம் வயலிடம் முதலிய இடங்களை யுமிழ்ந்தும் மலசலங் கழித்தும் அசுத்தம் செய்தலாகாது. 

மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)

பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்;
பகல் பெய்யார், தீயினுள் நீர்.
33


பகல் தெற்கு நோக்கியும் இராவடக்கு நோக்கியும் இருந்து மூத்திர புரீடங்களைச் சேரார், பகற் பொழுதின்கண் தீயினுள் நீர் பெய்யார். 

கருத்துரை: மலசலங் கழிப்பவர் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் இருந்து கழித்தலாகாது. 

மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(இன்னிசை வெண்பா)

பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிவோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
'தந்திரத்து வாழ்தும்!' என்பார்.
34


திசை பத்தினையும் மறைத்தாராக மனத்தாற் கருதிப் பத்துத் திசையின்கண்ணும் அன்றியிலே வேறோரிடத்தின்கண்ணே சோர்கின்றாராகக் கருதியல்லது உமிழ் நீரையும் மூத்திர புரீடங்களையும் இந்திர பதவியைப் பெறுவதாயிருப்பினும் சோரார் நூன்முறையான் ஒழுகுதும் என்பார். 

கருத்துரை: திசை பத்தையும் மறைத்ததாகப் பாவித்து அந்தரத்திற் செய்வதாக நினைத்து எச்சி லுமிழ்தலும் மலசலங் கழித்தலும் செய்க. 

வாய் அலம்ப ஆகாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)

நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்;
வழி நிலை, நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால்
பெய் பூச்சுச் சீராது எனின்.
35


நீரகத்தின் கண்ணின்றும் நடவாநின்றும் தம் வாயைப் பூசார், ஓடுநீர் பெற்றிலராயின் நிலை நீருள்ளும் அப்பெற்றி பூசார். அந்நீர் அருந்தும்போது பூசும்போதும் மனத்தான் வரையறுத்துக்கொண்டல்லது பூசார், அதுவுஞ் செய்வது கலத்தான் முகந்து சிலர் பெய்யப் பூச முடியாதாயின். 

கருத்துரை: தண்ணீரில் நின்றுகொண்டும் நடந்துகொண்டும் வாயலம்பாது ஒரு கலத்தில் மொண்டே வாயலம்ப வேண்டும். 


ஒழுக்கமற்றவை
(பஃறொடை வெண்பா)

சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்;
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்;
படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்;
பலர் இடை ஆடை உதிராரே; - என்றும்
கடன் அறி காட்சியவர்.
36


ஒருவருக்கும் விளக்கிற்கும் நடுவூடறுத்துப் போகார், சுவரின்மேல் உமியார், தமக்குக் குளிரான் இடர் வரினும் பிறருடுத்த மாசுணியைத் தங்கீழ்ப்படுப்பதும் மேற் போர்ப்பதும் செய்துகொள்ளார், படை வந்ததாயினும் தாமுடுத்த ஆடைக் காற்றுப் பிறர்மேல் உறைப்பப் போகார்; பலர் நடுவண் நின்று உடையை உதறார்; எஞ்ஞான்றும் கடப்பாட்டை அறிந்த அறிவுடையார், 

கருத்துரை: விளக்குக்கும் ஒருவர்க்கு மூடே செல்லுதல், சுவரில் உமிழ்தல், பிறரழுக்குடை யணிதல், அடுத்தவர்மேல் தம் ஆடைக் காற்றுப்படச் செல்லுதல், பலரிடைத் தம் ஆடையை உதறுதல் ஆகியவற்றைச் செய்தலாகாது 

நரகத்துக்குச் செலுத்துவன
(நேரிசை வெண்பா)

பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு,
அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார் - திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலான்.
37


பிறர் மனையாளும், கள்ளும், களவும், சூதும், கொலையும் என்றிவ்வைந்தினையும், அறனறிந்தார் செய்வோமென்று கருதார். கருதுவாராயின் திறப்பாடிலரென்று பலரால் இழக்கப் படுதலுமன்றியே, நரகத்தின்கண் செல்லும் நெறியில் இவை செலுத்துதலான். 

கருத்துரை: பிறர்மனை நயத்தல். கள்ளுண்ணல், களவு செய்தல், கொலைசெய்தல், சூதாடல் இவை இகழ்ச்சிக்கும் நரகத்துக்கும் காரணமாதலால் இவைகளை மனத்திலும் நினைத்தல் ஆகாது. 

எண்ணக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)

பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும்.
38


பொய்யும் குறளையும் பிறர் பொருளை வௌவுதலும் பிறராக்கத்தின்கண் பொறாமையும் என இவை நான்கினையும் ஐயந்தீர்ந்த அறிவினையுடையார் நினையார்; நினைப்பாராயின் பிச்சை புகுவித்து நரகத்தின்கண்ணேயும் புகுவிக்கும் : தெய்வமும் கெடுத்துவிடும். 

கருத்துரை: பொய் குறளை பேசுதலும், பொறாமை யுறுதலும், பிறர் பொருள் வௌவுதலும் ஆகிய இவை வறுமையுறுவித்துத் தெய்வத்தின் கோபத்துக்கும் ஆளாக்கும். 

தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்!
39


தமக்கென் றுலை யேற்றார்; பிறருக்கு உழைப்பதற்காக அன்றித் தமக்காக உணவும் உட்கொள்ளார்; அட்டிலின்கண் எச்சிற்படுத்தார்; மனையுறை தெய்வங்கட்குப் பலியூட்டினமை அறிந்த பின்னைத் தாம் உண்பர். 

கருத்துரை: பெரியோர் தந்நலம் கருதிச் செயல் செய்யார். 

சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உயர்ந்ததின் மேல் இரார்; - உள் அழிவு செய்யார்,
இறந்து இன்னா செய்தக்கடைத்தும்; - குரவர்,
இளங் கிளைகள் உண்ணும் இடத்து.
40


புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணுமிடத்துக் குரவராயினார் உயர்ந்ததன் மேலிரார். இளங்கிளைஞர் மனமழிவனவற்றையும் செய்யார், முறைமை கடந்து மற்றவ் விளங்கிளைஞர் இன்னாத செய்த காலத்தும். 

கருத்துரை: புதிய உறவினர்கள் உண்ணுமிடத்துப் பெரியோர் உயர்ந்த பீடத்திலிருத்தலும், அவர்கள் மனம் நோகும்படி ஏதாவது செய்தலும் ஆகா. 


சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்;
புண்ணிய ஆய தலையோடு உறுப்பு உறுத்த! -
நுண்ணிய நூல் உணர்வினார்.
41


ஒருவன் தன் கண்ணிற்கு மருந்து எழுதிய கோல்கொண்டு அவ்வெச்சில் கழியாது தங்கண்ணிற்கு அம்மருந்து ஊட்டார், தங் காலோடு கால் தேயார், புண்ணிய மாய பொருள்களைத் தம் தலையின்கண்ணும் மற்றை உறுப்பின் கண்ணும் உறுத்துக; நுண்ணிய நூலை யுணர்வார். 

கருத்துரை: ஒருவர் கண்ணெழுதிய கோலைச் சுத்தம் செய்யாமல் பிறர் கண்ணிற் செலுத்தக்கூடாது. காலொடு கால் தேய்க்கலாகாது. புனிதமான பொருள் கிடைத்தால் அதனைத் தலையிலும் கண் முதலிய உறுப்புக்களிலும் ஒற்றிக்கொள்க. 

மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!' என்பதே -
பேர் அறிவாளர் துணிவு.
42


தம் மனைவியர்க்குப் பூப்பு நிகழ்ந்தால், மெய்யுறலாகாத நாள் மூன்றின்கண்ணும் அவரை நோக்கார், நீராடிய பின்பு பன்னிரண்டு நாளும் அகலாதொழிக என்று சொல்லப்படுவது பேரறிவாளர் துணிவு. 

கருத்துரை: மனைவியர்க்கு மாதப்பூப்பு நிகழ்ந்தால் மூன்று நாளளவும், அவர் முகத்தைக் கணவன் காணலாகாது. மூன்று நாளுங்கழிந்து தலைமுழுகினபின் பன்னிரண்டு நாளளவும் அவரைப் பிரிதலாகாது. 

உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)

உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி,
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண்.
43


உச்சியம்பொழுதும், நடுக் கங்குலும், மாலையுங் காலையும், மிக்க இருதேவர் நாளாகிய ஆதிரையும் ஓணமும், உவாவும், அட்டமியும், தாம் பிறந்த நாளும் என இந்நாட்களின்கண் தம் மனைவியரோடு உடனுறைதலின்கண் நல்லோர் உடன்படார். 

கருத்துரை: நடுப்பகலிலும் நள்ளிரவிலும் மாலையிலுங் காலையிலும் திருவாதிரையிலும் திருவோணத்திலும், அமாவாசை பௌர்ணமியிலும் அட்டமியிலும் பிறந்த நாளிலும் கலவியாகாது. 

நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)

நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்;
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்!
44


நாழியை மணைமேல் இருத்தார். மணையைக் கவிழ்த்து வையார், புத்தாடையைத் தலைக்கடையின்கண் விரியார், பலருங் புகுதுங் கடைத்தலைக்கண் ஆராயாது கட்டிற்படார்; தம்மை அறியாதவர் முன்பு நில்லாது விடுக. 

கருத்துரை: அளக்கும் படியை மணைமேல் வைத்தலும், மணையைக் கவிழ்த்து வைத்தலும், புத்தாடையைத் தலைக்கடையில் விரித்தலும், தலைக்கடையிற் கட்டிலிட்டுப் படுத்தலும் ஆகா. தம்மை யறியாதா ரெதிரில் நிற்காதிரு. 

பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

துடைப்பம், துகட் காடு, புல் இதழ், செத்தல்
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து!
45


துரால் சீக்குந் துடைப்பமும், துகளோடு கூடிய துராலும், பூவின் புறவிதழும், பழங் கருங்கலங்களும், கிழிந்த கட்டிலும் என இவ்வைந்தும் மணப்பந்தரின் கீழ்ப்பரப்பா தொழிக. 

கருத்துரை: திருமணப்பந்தலின்கீழ்த் துடைப்பம், செத்தை, பூவின் புறவிதழ், பழங் கரிப்பானை. கிழிந்த கட்டில் என்னுமிவைகளைப் பரப்பலாகாது. 


வீட்டைப் பேணும்முறைமை
(பஃறொடை வெண்பா)

காட்டுக் களைந்து கலம் கழீஇ, இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்!
46


சிறு காலையே துயிலெழுந்து, இல்லத்துள்ள துராலைக் களைந்து, கருங்கலங்களைக் கழுவி, தம் மனை ஆப்பி நீராலே எங்குந் தெளித்து, நீர்ச்சாலையும் கரகத்தையும் நிறைய மலரணிந்து, இல்லத்துப் பொலியும்படி அடுப்பினுள் தீ யுண்டாக்குக; நல்ல செல்வத்தை யுறல் வேண்டுவோர். 

கருத்துரை: நல்ல செல்வத்தை யடைய வேண்டுவோர் வைகறையில் எழுந்து வீட்டை விளக்கிக் கலங்களைக் கழுவி வீடு முழுவதும் சாணநீர் தெளித்து, நீர்ச்சால், கரகங்களை மலரணிந்து, பின்பு அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும். 

நூல் ஓதுதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)

அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள்.
47


அட்டமி நாளும் உவாநாளும், பதினான்காநாளும், தாமுறையும் பூமி காக்கும் அரசர்க்கு உறுகண்ணுள்ள நாளும், தமக்குத் தூய்மை போதாத நாளும் என இந்நாட்கள் பார்ப்பார் வேதமோதாத நாட்கள். 

கருத்துரை: அட்டமி அமாவாசை பௌர்ணமி சதுர்த்தசி அரசர்க் குறுகண்வேளை பூகம்பம் இடிமுழக்கம் தூய்மையின்மை என்னு மிவை வேதமோதலாகாக நாட்கள். 

அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கலியாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்!
48


தான் செய்யும் கலியாண நாளின்கண்ணும், தேவர்க்குரிய சிறப்புநாளின்கண்ணும், பிதிர்கட்குச் சிறப்புச்செய்யும் நாளின்கண்ணும், விழாநாளின்கண்ணும் யாகம் செய்யும் நாளின்கண்ணும் இகழாதே கொடையறஞ் செய்க; விருந்தினர்க்குஞ் சோறிடுக. 

கருத்துரை: கலியாண நாள் முதலிய ஐவகை நாட்களிலும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குஞ் சோறிடுக. 

நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் -
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும், தக்க செயல்!
49


உடையும் நடையும் சொற்சோர்வும் வைதலும் என இந்நான்கும், தாம் அரசனால் சிறப்புப் பெற்றமைக்கும், தன் ஆண்மைக்கும், தம் கல்விக்கும், குடிப்பிறப்புக்கும் தக்கனவாக அமையும் செயல்களாம். 

கருத்துரை: உடை நடை முதலியவைகள் தத்தம் நிலைமை கல்வி முதலியவற்றுக்குத் தகுந்தபடி அமையும். 

கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)

பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர்.
50


பலர் நடுவண் இருந்து பிறரைப் பழித்துரையார், இழித்துரையார் பலர் நடுவண் உறங்கார், தமக்குச் செய்யப் பொருந்தாதவற்றைப் பிறர்க்குச் செய்கிறோமென்று உடன்பட்டுச் செய்யாதொழியார், தகுதியின்றி வறியாரை இகழ்ந்து முறைமை கடந்து உரையார், பிறரால் வெல்லுதற்கரிய கேள்வியார் தவறியும். 

கருத்துரை: கல்வி கேள்வியுடையர் பலர் நடுவிலிருந்து பழித்திழித்துப் பேசார், உறங்கார், ஒன்றைச் செய்வதாக ஒப்பிப் பின் செய்யாதிரார், ஏழைகளை யிகழ்ந்துரையார். 




தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)

முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில்.
56


முற்றிய புல்லின்கண்ணும், முற்றிய காட்டின்கண்ணும் சேர்ந்திரார்; அவற்றைத் தீக்கு உணவாக ஊட்டார்; மழை பெய்யாநிற்கக் காலைப்பரப்பி ஓடார்; தேறமுடியாத காட்டுள் தமியராய்ப் போகார்; மழை குறைந்து பெய்யா தொழிதலால் வறுமை மிகப் பெரிதாயிற்றாயினும், தங்குடி யொழுக்கத்தை நீங்கிய தொழில்களைச் செய்யார். 

கருத்துரை: உலர்ந்த புற்றரையிலும் முதிர்ந்த காட்டிலும் தங்குதலும், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துதலும், மழை பெய்கையில் காலைப் பரப்பி யோடுதலும்; வழிதுறை தெரியாத காட்டில் தனியாகப் போதலும்; வறுமை வந்த காலத்து நல்லொழுக்கந் தவறுதலும் தகாத காரியங்களாம். 

நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)

பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்; -
நோய் இன்மை வேண்டுபவர்.
57


குடியில்லாத மனையகத்தும், தேவாலயங்களுக்குள்ளும் சுடுகாட்டுள்ளும், ஊரில்லாத இடத்து உளதாய தனி முதுமரத்தின்கண்ணும், அறிவின்றித் துணையோடல்லது தாமே போகார், பகலுறங்கார் நோயின்மை வேண்டுவோர். 

கருத்துரை: பாழ் வீடு, சுடுகாடு; தனித்த பாழ் மரம் இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில் தூங்காமலுமிருப்பது, நோயில்லாதிருப்பதற்கு ஏது. 

ஒருவர் புறப்படும்போது செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)

எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும்,
எங்கு உற்றுச் சேறிரோ?' என்னாரே; முன் புக்கு,
எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்;
கொள்வர், குரவர் வலம்.
58


பிறர் எழுந்து போகத் தொடங்கின பொழுது அவரைப் பின்னே நின்று அழையார். அப்பொழுது தும்முவதுஞ் செய்யார். மறந்தும் எங்குப் போகிறீர் என்று சொல்லார். முன்னே புக்கு எதிர்முகமாக நின்றும் ஒன்றைச் சொல்லார். அவர்க்கு இருமருங்கும் நின்று சொல்வார். தம் குரவர் போம்பொழுது வலங்கொண்டு போவர். 

கருத்துரை: ஒருவர் எழுந்து போம்பொழுது அவரை அழைத்தல், எங்கே போகிறீர் என்று கேட்டல் செய்யலாகாது, பெரியோர் பக்கம் நின்று பேசுக, வலங்கொண்டு போக. 

சில தீய ஒழுக்கங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'உடம்பு நன்று!' என்று உரையார்; ஊதார், விளக்கும்;
அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப்
படக் காயார், தம்மேல் குறித்து.
59


பிறரைப் பார்த்து உமது உடம்பு நன்றாயிருக்கிறது என்று சொல்லார், விளக்கினை வாயால் ஊதி யவியார், அட்டிலடுப்பின்கண் நெருப்பவியச் செய்யார், அந்நெருப்பின் சுடர் தம் மேற்படக் குளிர்கெடக் காயார். 

கருத்துரை: ஒருவருடம்பு நன்றாயிருக்கிற தென்பதும், விளக்கை வாயாலூதல், ஒருபொருள் வேகும்போது அடுப்பு நெருப்பை அவித்தல் முதலியவையும் தீயொழுக்கங்களாம். 

சான்றோருடன் செல்லும் போது செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

யாதொன்றும், ஏறார், செருப்பு; வெயில் மறையார்; -
ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து.
60


யாதொன்றிலும் ஏறிப்போகார், செருப்புத்தொடார், தம்மேல் வெயில்மறைக்கக் குடை பிடித்துப் போகார் ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்முடன்கூட வழிபோமிடத்து. 

கருத்துரை: பெரியோருடன் செல்லும்பொழுது வாகனத்தில் ஏறியும் காலிற் செருப்பணிந்தும் குடை பிடித்தும் செல்லுதல் கூடா. 


நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல் -
நூல் முறையாளர் துணிவு.
61


வாலிய முறையான் வந்த நான்மறையாளரை மேலாகிய முறைமையையுடைய தங்குரவரைப்போல் கொண்டொழுகுதல் நூல்முறையாளர் துணிவு. 

கருத்துரை: குலத்தாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த அந்தணரைத் தம்முடைய குரவர்போற் கொண்டு ஒழுக வேண்டும். 

சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று.
62


காலின்கண் தொழுதலும், அவர் நன்றென்ற சமயத்தின்கண் நிற்றலும், அவரைக் கண்டால் எழுந்திருத்தலும் என இவை குரவர்க்குச் செய்யும் ஆசாரம் என்று சொல்லுவர் நல்லார்; குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் பல வற்றுள்ளும் சாரத்தாற் சொல்லப்பட்டவை இம் மூன்றுமேயாகும். 

கருத்துரை: குரவர்க்குச் செய்யும் ஆசாரங்கள் அவரைக் காலின்கண் வணங்குதல், அவர் கூறும் நெறியில் நிற்றல், கண்டவுடன் எழுந்திருத்தல் ஆகிய மூன்று. 

கற்றவர் கண்ட நெறி
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

துறந்தாரைப் பேணலும், நாணலும், தாம் கற்ற
மறந்தும் குரவர் முன் சொல்லாமை, மூன்றும்,
திறம் கண்டார் கண்ட நெறி.
63


அருந்தவரைப் பாதுகாத்தலும், பழிநாணலும், தாங் கற்றவற்றைக் குரவர்முன் மறந்தாயினுஞ் சொல்லாமையும் என இம்மூன்றும் திறப்பட வறிந்தார் அறிந்தநெறி. 

கருத்துரை: அருந்தவரைப் பேணலும், பழி நாணலும், குரவர்முன் தாங் கற்ற திறத்தை யெடுத்துரையா திருத்தலும் சிறந்த வொழுக்கங்கள். 

வாழக்கடவர் எனப்படுபவர்
(இன்னிசை வெண்பா)

பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார்,
மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு
ஆற்ற வழி விலங்கினாரே - பிறப்பினுள்
போற்றி எனப்படுவார்.
64


பார்ப்பாரும், தவசியரும், சுமந்தாரும், பிணிப்பட்டாரும், மூத்தாரும், பிள்ளைகளும், பசுக்களும், பெண்டிரும் என்று சொல்லப்பட்ட இவர்க்கு மிகவும் வழி கொடுத்து விலகிப் போயினாரே மக்களாகப் பிறந்தவர்களுள் பிறராற் போற்றி யென்று சொல்லப்படுவார். 

கருத்துரை: பார்ப்பார் தவசியர் முதலியவர்களைக் கண்டால் வழிவிட்டுச் செல்வதே நெறி. 

தனித்திருக்கக் கூடாதவர்(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள், ஆயினும்,
சான்றார் தமித்தா உறையற்க - ஐம் புலனும்
தாங்கற்கு அரிது ஆகலான்!
65


தாயுடனாயினும், மகளுடனாயினும், தம் உடன் பிறந்தாளுடனாயினும் சான்றோர் தனித்து உறையார், ஐம்புலன்களையுந் தடுக்கல் அரிதாகலான். 

கருத்துரை: ஐம்புலன்களையும் அடக்கி நடத்த லருமையாதலின் தாய் முதலியவர்களுடனும் தனித்திருத்தல் தகாது. 




மன்னன் முன் சொல்லக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

இறைவர் முன், செல்வமும், கல்வியும், தேசும்,
குணனும், குலம் உடையார் கூறார் - பகைவர்போல்
பாரித்து, பல் கால் பயின்று.
71


அரசர் முன்புதம் செல்வமும், கல்வியும், தமது விளக்கமும், குணனும் குடிப்பிறந்தார் தமக்குத் துன்பஞ் செய்யும் பகைவர்போல் பரப்பிப் பல்கால் பயின்றுரையார். 

கருத்துரை: ஒருவர் தங் கல்வி, செல்வம், குணம் முதலியவற்றை அரசர் முன்ன ரெடுத்துரைத்து அதனால் கெடுதியடையாதிருக்க வேண்டும். 

வணங்கக்கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்,-
வணங்கார் - குரவரையும் கண்டால்; அணங்கொடு
நேர் பெரியார் செல்லும் இடத்து.
72


அரசர் மனையகத்தும் தேவாலயங்களுள் குரவரையுங் கண்டால் வணங்கார், தெய்வங்கள் புறம் போந்தெழுந்தருளு மிடத்தும், அரசர் புறம் போதுமிடத்தும் கண்டாலும் வணங்கார். 

கருத்துரை: அரண்மனை, ஆலயம், தெய்வவிழாக் காலம் அரசர் ஊர்வலம் வருங்காலம் இவற்றில் பெரியரைக் கண்டால் வணங்கா தொழிக. 

மன்னர் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

நகையொடு, கொட்டாவி, காறிப்பு, தும்மல்,
இவையும் பெரியார் முன் செய்யாரே; செய்யின்,
அசையாது, நிற்கும் பழி.
73


சிரிப்பும் கொட்டாவியும் காறியுமிழ்தலும் தும்மலும் என, இவையும் அரசர் முன்பு செய்யார், செய்வாராயின், பழி குறையாது நிற்கும். 

கருத்துரை: அரசர் எதிரில் சிரித்தல் கொட்டாவி விடுதல் முதலியவற்றைச் செய்யற்க, செய்தாற் பழியே உண்டாகும். 

ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)

நின்றக்கால், நிற்க, அடக்கத்தால்! என்றும்
இருந்தக்கால், ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும்
வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்!
74


நன்மாணாக்கர் என்றும் ஆசிரியர் முன் அடங்கி யொழுகவேண்டுதலின், அவர் பாடஞ் சொல்லுதலை நிறுத்தினால் தாமும் நிற்கக்கடவர், அவர்முன் இருந்தபோது அவர் ‘எழுந்து போ' என ஏவுதற்குமுன் எழுந்து போகார். அவர் பாடம் முதலியவற்றைச் சொல்லின் செவிதாழ்த்துக் கேட்க, அவர் யாதொன்றும் சொல்லாவிடின் வினவாதிருக்கக் கடவர். 

கருத்துரை: நன்மாணாக்கர் ஆசிரியர் இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் போவெனப் போய், செவி வாயாகக் கேட்டவை விடாதுளத்தமைக்க முயல்வர். 

சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்-
எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும்
கொள்ளார்; பெரியார் அகத்து.
75


பெரியாரவைக்களத்தில் ஆடையைக் களையார், காதைச் சொறியார், கைமேலெடுத்துப் பேசார். மாதர்களை நோக்கார், பிறர் செவியிற் சொல்லுஞ் சொல்லையுங் கேளார். 

கருத்துரை: பெரியோர் அவையிற் காதைச் சொறிதல், ஆடையைக் களைதல், கையுயர்த்திப் பேசுதல் முதலியன செய்யலாகாதன. 


சொல்லும் முறைமை
(இன்னிசை வெண்பா)

விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய
பரந்து உரையார்; பாரித்து உரையார்; - ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்
சொல்லுக, செவ்வி அறிந்து!
76


கடுகியுரையார், மேன்மேலுரையார், பொய்யாய சொற்களைப் பரக்க உரையார், தாம் உரைக்கத்தக்க சொற்களைப் பரப்பியுரையார், கூறவேண்டிய எனைத்தினையும் ஒரு மிக்க சில்லெழுத்தினானே பொருள் விளங்கும் வகை காலத்தோடு படுத்திக் கேட்போர் செவ்வியறிந்து சொல்லுவர். 

கருத்துரை: ஒருவரிடத்தில் ஒன்றைச் சொல்லும்பொழுது விரைதல் மேல்மேலுரைத்தல் முதலிய செய்யாது, சில்லெழுத்திற் பொருளடங்கப் பேசுதல் வேண்டும். 

நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார்,
எம் மேனி ஆயினும் நோக்கார்; தலைமகன்-
தம் மேனி அல்லால் பிற.
77


நற்குலப் பெண்டிர் தம் கணவரது உடலின் வடிவத்தையன்றி ஏனை ஆடவரது மேனி எத்துணை அழகுடையவேனும் பாரார்; தம் உடலின் வடிவத்தையும் நோக்கார்; தலை மயிரைக் கோதார்; கைந்நொடித்தல் முதலியன செய்யார், 

கருத்துரை: குலமாதர் தம் கணவருடல் வடிவையன்றிப் பிறர் வடிவழகு காண வொருப்படார். தலைமயிர் கோதல் கைந்நொடித்தல் முதலிய தீப்பழக்கங்களுங் கொள்ளார். 

மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச்
சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று
தேர்வார்போல் நிற்க, திரிந்து!
78


பிறரோடுகூட இருந்து ஒன்றனை ஆராயார், அரசனைச் சாரநில்லார் : அரசன் பிறனொருவனுக்குச் சொல்லுஞ் சொல்லைத் தஞ்செவியில் ஓரார், அரசன் ஒன்றனை ஒருவனுக்குச் சொல்லும்பொழுது குறுகநின்றாரெனின், பிறிதொன்றனை ஆராய்வார்போல முகந்திரிந்து நிற்க. 

கருத்துரை: அரசவையில் வேறொருவனிடமிருந்து ஒன்றையாராய்தல், அரசன் அருகினிற்றல், மறை கேட்டல் முதலியன செய்தல் ஆகா. 

பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)

துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும், அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை, - இம் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.
79


துன்பக் காலத்தில் அத் துன்பத்துள் அமைவுற்று வாழ்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கு இன்பு செய்யும் வகையான் இன்புற்று நடத்தலும், அன்பினின்றும் வேறுபட்டாரில்லம் புகாமையுமாகிய இம்மூன்றும் ஒரு திறப்பட்டார்கண்ணே உளவாம். 

கருத்துரை: துன்பக்காலத்தில் துன்பத்தைப் பொறுத்திருத்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கும் இன்பமுண்டாக நடத்தலும், அன்பற்றவர் வீடு அடையாமையும் ஒருவழிப்பட்டார் செய்கையாம். 

சான்றோர் பெயர் முதலியவற்றை கூறாமை
(நேரிசை வெண்பா)

தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும்
நன்கு அறிவார் கூறார், முறை.
80


நன்கறிவார் தாம் வெகுண்டாராயினும் தங்குரவர் பெயரைச்சொல்லார்; தம்மில்லத்தின்கண் தம் மனைவியை மிகவும் கழறியுரைத்து நெடிதிரார்; தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு சொல்லார்; புலையரையும் முறைப்பெயர் கொண்டு கூறார். 

கருத்துரை: வெகுண்ட விடத்தும் தங்குரவர் பெயரைக் கூறுதலும், நெடுநேரம் மனையாளைக் கடிந்து பேசலும், பெரியார் புலைய ரிவர்களை முறைப்பெயரிட் டழைத்தலும் ஆகா. 


ஆன்றோர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை,
இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத்
தொழிற்கு உரியர் அல்லாதவர்.
81


பிறர் மனையின்கண் புழைக்கடை வாயிலால் புகார், அரசன் கோட்டி கொண்டு கூத்து முதலாயின இன்புறாநின்றவிடத்தும், உரிமை மகளிரோ டிருந்தவிடத்தும் செவ்வியராயுள்ளா ரென்றும் நோக்கார்; அந்தந்தத் தொழிற்குரிய ரல்லாதார். 

கருத்துரை: வேறொருவர் வீட்டில் புழைக்கடை வாயிலாற் போதலும், அரசன் களியாட்டிடத்தும் அந்தப்புரத்திடத்தும் செல்லுதலும் ஆன்றோர் செயலாகா. 

மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்,
ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி,
மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே; - பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும்.
82


அறிவுடையோர் என்று சொல்லப்படுவோர் கோலஞ்செய்யு மகளிரிடத்தோடு சேர்ந்த தம்மிடத்தை வாழ்க்கைக்குச் சிறந்த இடமாகக் கொள்ளார். தெளிவுற்று மிகுந்த உரிமையுளதாயினும் விரும்பப்படுவனவல்ல, தம் மனைவியர்க்கு விருப்பம் வேறுபடும் ஆதலால். 

கருத்துரை: பொது மகளிர் வீட்டினருகிற் குடியிருப்புக் கொள்ளின் மனைவியர் மனவிருப்பம் மாறுபடும். 

கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
(இன்னிசை வெண்பா)

நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்;
உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்;
அரசர் படை அளவும் சொல்லாரே; - என்றும்,
'கடைபோக வாழ்தும்!' என்பார்.
83


ஒருவர் பக்கத்தில் வரிசைப்படப் போகார் - ஒருவருடைய நிழலை மிதித்து நில்லார், முள்னர் ஆராய்ந்தன்றிப் பேசும்போது ஆராய்ச்சிசெய்து பேசார், ஊரிலுள்ளோர் வெறுக்கத்தக்கவைகளைச் செய்யார், அரசரது படையளவைப் பகைவர்க்குச் சொல்லார், எப்போதும் ஒரு தன்மையராய் வாழ்தும் என்பார். 

கருத்துரை: ஒருவர் பக்கத்திற் போகும்போது ஒரு வரிசைப்படப்போதல், ஒருவர் நிழலை மிதித்து நிற்றல், பேசும்போது இடையில் நினைந்து பேசுதல், ஊரார் வெறுப்பன செய்தல், அரசர் படையளவுரைத்தல் இவை ஆகாதன. 

பழகியவை என இகழத் தகாதவை
(இன்னிசை வெண்பா)

அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும்,
முழை உறை சீயமும், என்று இவை நான்கும்,
இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி,
இகழின், இழுக்கம் தரும்.
84


புற்றில் வாழ் அரவும் அரசனும் தீயும் குகையில் வாழ் சிங்கமும் என்கின்ற இந்நான்கினையும் இளையவென்றும், எளியவென்றும், பழகியவென்றும் எண்ணியிகழின், துன்பந் தருவனவாம். 

கருத்துரை: பாம்பு அரசன் நெருப்பு சிங்கம் இந்நான்குடன் நெருக்கமாயும் எச்சரிகையில்லாமலும் பழகலாகாது. 

செல்வம் கெடும் வழி
(நேரிசை வெண்பா)

அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை,
இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல்,
மன்னிய செல்வம் கெடும்.
85


அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும். 

கருத்துரை: எத்தகைய செல்வரும் அறம் மணம் முயற்சி வீடு இவ்வகையில் அரசரினும் மேம்படச் செலவு செய்யலாகாது. 


பெரியவரை 'உண்டது யாது' என வினவக் கூடாது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உண்டது கேளார், குரவரை, மிக்காரை,
கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும்
உண்டது கேளார் விடல்!
86


ஐங்குரவரையும் சான்றோரையும் கண்டால் மனம் வேறுபடாதவர்கள் அவரை நோக்கி, ‘நீவிர் உண்டது யாது' என வினவார். அதுபோல் கீழோரையும் ‘நீவிர் உண்டது யாது' என்று வினவா தொழிக. 

கருத்துரை: ஐங்குரவரையும் பெரியோரையும் கண்டால், ‘நீங்கள் உண்டது என்ன?' என்று கேட்கலாகாது; அதுபோல் கீழோரையும் கேட்கலாகாது. 

கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம்
மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண்
நில்லார், தாம் - கட்டில்மிசை.
87


எப்போதுங் கட்டிலின்மீது படுத்திருப்பவரது காலைக் கழுவார், அவருக்குப் பூப்புனையார், அவருக்கு மறந்தாவது சந்தனமும் பூசார், அருகில் நிற்றலுஞ் செய்யார். 

கருத்துரை: ஒருவர் கட்டிலின்மேற் படுத்திருந்தால் அப்போது அவருடைய காலைக் கழுவுதலும், அவருக்குப் பூச்சூடுதலும், சந்தனம் பூசுதலும், அவரருகில் நிற்றலும் ஆகா. 

பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்;
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்; -
'திறத்துளி வாழ்தும்!' என்பார்.
88


தாமொருவருக்குச் செய்த நன்றியின் பயனைச் சொல்லார், தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்ந்துரையார், தாம் செய்த அறத்தையும் விரதத்தையும் புகழ்ந்துரையார், பெரியோருடைய ஒழுக்கத்தினை நினைத்து அவ்வாறு வாழ்துமென் றெண்ணுவோர். 

கருத்துரை: தாம் பிறர்க்குச் செய்த உதவியைத் தாமே பாராட்டுதலும், பிறர் இட்ட உணவை யிகழ்தலும், தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும்தகா. 

கிடைக்காதவற்றை விரும்பாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு,
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்; -
மெய்யாய காட்சியவர்.
89


தமக்குக் கிடைத்தற் கரியவற்றை விரும்பார், தம்மால் இழக்கப்பட்டனவற்றிற்கு வருந்தார், அகற்றற்கரிய இடுக்கண் உற்றுழியும் அதற்கு மனங்கலங்கார், உண்மையான அறிவினை யுடையவர். 

கருத்துரை: கிடைத்தற் கரியவற்றை விரும்புதலும், இழந்த பொருட்கு வருந்துதலும், அரிய துன்பத்திற்கு மனங் கலங்குதலும் பயனற்ற செயல்களாம். 

தலையில் சூடிய மோத்தல் முதலானவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச்சூடார்;
பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும்,
புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்!
90


எப்போதும் தலையில் முடித்த பூவைத்தாம் முகவார், ஒருவர் மோந்த பூவையும் சூடார், பிராமணர் பசுவினைக் கொடுத்தாலும் அதனைப் பெரியோர் வாங்கார், புலையருக்கு எச்சிலைக் கொடார், (ஆதலால்) இவைகளை விடுக. 

கருத்துரை: தலையில் முடித்த பூவை மோத்தலும், மோந்த பூவைச் சூடுதலும், பிராமணரிடம் பசுக்கொடை பெறலும் கூடா; புலையருக்கு எச்சில் கொடுத்தலும் ஆகாது. 


பழியாவன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தும், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார் - மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான்.
91


காட்டினிடத்திலேனும் தம்மினும் மூத்தன உளவா யிருப்பதனால், அங்கும் உடலின்மீது போர்த்தலும், இறுமாந்திருத்தலும், இரு தாளையுஞ்சேர்த்து இணைத்திருத்தலும் பழிக்கு ஏதுவாகும். 

கருத்துரை: காட்டிலும் உடலின்மீது போர்த்தலும், செருக்குற்றிருத்தலும் கூட, அட்டணைக்காலிட்டிருத்தலும் ஆகா. 

அந்தணரின் சொல்லைக் கேட்க!
(நேரிசை வெண்பா)

தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும்,
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க - அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல!
92


அறிவுடையோர் மேலான நற்கருமங்களைச் செய்யுமிடத்து எப்போதும் புலையரிடத்து நாட்கேட்டுச் செய்யார். ஒழுக்கக் கேடில்லாத அந்தணரிடத்து நாட்கேட்டே நற்கருமஞ் செய்க; அவர் வாய்ச்சொல்என்றும் பிழைபடுவதில்லை ஆதலால். 

கருத்துரை: நற்கருமம் செய்பவர் ஒழுக்கங் குன்றாத அந்தணர்வாய் நாட் கேட்டுச் செய்தலே நன்மையானது. 

சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்;
என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய்
நின்றுழியும் செல்லார்; - விடல்!
93


அறிஞர், சான்றோர் அவைக்களத்து யாதோர் அங்க சேட்டையுஞ் செய்யார், மாசுள்ளவற்றைத் திமிர்ந்து கொண்டு நடவார், எக்காலத்தும் கடுஞ்சொற்கள் உரையார், இருவராயிருந்து பேசுமிடத்தும் போகார், ஆதலால் இவற்றை ஒழிக. 

கருத்துரை: பெரியோர் அவையில் யாதோர் அங்க சேட்டையுஞ் செய்தலாகாது; நடக்கும்பொழுது அழுக்கைத் தேய்த்து நடக்கலாகாது; கடுஞ்சொற் கூறலாகாது; இருவராகவிருந்து பேசுமிடத்திற்கும் போதலாகாது. 

ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
(இன்னிசை வெண்பா)

கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார்,
மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்;
கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்; -
ஐயம் இல் காட்சியவர்.
94


ஐயமற்ற அறிவுடையோர் தங்குரவர் முன்கையைச் சுட்டிக்காட்டிப் பேசார், காலின்மேல் எழுதார், கல்வி முதலியவற்றை யுடையாரோடு அவற்றை இல்லாரை மெய்யெனச் சாதித்து ஒப்பிட்டுக் கூறார், குரவர் கொடுப்பதை உட்கார்ந்திருந்து ஏற்கார். 

கருத்துரை: பெரியோர்க்கு முன் கையைச் சுட்டிக்காட்டிப் பேசுதலும், காலால் எழுதுதலும், அறிவொழுக்கங்கள் இல்லாரை அவற்றையுடையார்க்கு ஒப்பாகச் சொல்லிச் சாதித்தலும், பெரியோர் கொடுப்பதை இருந்து வாங்குவதும் தகாத செயல்கள். 

பொன்னைப் போல் காக்கத் தக்கவை
(இன்னிசை வெண்பா)

தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,
பொன்னினைப்போல் போற்றிக் காத்து உய்க்க! உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும்.
95


தன் உடலும், மனைவியும், தன்னிடத்தில் அடைக்கலமாக ஒருவன் வைத்த பொருளும், தன்னுயிர்க்கு உதவியாக எண்ணிச் சேர்த்து வைத்த பொருளும் ஆகிய இந்நான்கினையும் பொன்னைப் போலக் காத்தொழுகுக. அவ்வாறு ஒழுகாவிடத்து மிகுந்த துன்பத்தைத் தரும். 

கருத்துரை: தன்னுடம்பு, தன்னுடைய மனைவி, அடைக்கலப் பொருள், தான் சேர்த்துவைத்த பொருள் இவற்றை அருமையாகப் பாதுகாக்க வேண்டும். 


எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
(இன்னிசை வெண்பா)

நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும்.
96


ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் பறவையும், காக்கையும் என்று சொல்லப்பட்ட இவைகளின் செய்கை போல நல்லனவாகிய தங் கருமத்தைச் சோராமற் கொண்டு, கிடையாத காலத்திற்கு உதவக்கிடைத்த காலத்தில் உணவிற்குரியவற்றைச் சேர்த்தலும், குளிர் காற்று முதலியவற்றால் இடையூறுஉறாதவகையாக இல்லம் இயற்றிக்கொள்ளுதலும், சுற்றத்தாரை விளித்துண்கையுமாகிய இக் கருமங்களைச் செய்பவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எத்தன்மையானுஞ் சிறப்புறும். 

கருத்துரை: எறும்பு, தூக்கணங் குருவி, காக்கை இவற்றின் செய்கையைக் கடைப்பிடித்தவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எவ்விதத்திலும் சிறக்கும். 

சான்றோர் முன் சொல்லும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி,
பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்-
கண்ணுளே நோக்கி உரை!
97


அறிஞர், பெரியார் முன் யாதேனும் ஒன்று உரைக்கவேண்டின், வணங்கி நின்றேனும் வாய்புதைத்து நின்றேனும் உரைப்பரேயன்றி, வேறு வகையின் உரையார்; ஆதலால் நீ அவர்முன் குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து உரைப்பாயாக. 

கருத்துரை: பெரியோரிடத்தி லொன்றைப் பேசும்பொழுது வணங்கி நின்றாவது வாய் பொத்தி நின்றாவது சொல்வதன்றி வேறுவிதமாகச் சொல்லலாகாது, அவர்முன் குற்றம் யாதும் உண்டாகாமல் ஆராய்ந்து கொள்க. ‘வழியவர்' என்றும் பாடம். உரை என்பதற்கு நீ தோன்றா எழுவாய். 

புகக் கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

சூதர் கழகம், அரவர் அறாக் களம்,
பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல்,
ஏதம் பலவும் தரும்.
98


சூதாடுமிடத்தும், பாம்புகள் நீங்காதுறையும் இடத்தும், அறியாமையை யுடையரல்லார் புகார்; புகுவராயின் பல துன்பங்களும் உளவாம். 

கருத்துரை: சூதாடுமிடத்திலும் பாம்புகள் மிகுந்த இடத்திலும் அறிவுடையோர் செல்லார். 

அறிவினர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும், -
நடுக்கு அற்ற காட்சியார் - நோக்கார், எடுத்து இசையார்,
இல்லம் புகாஅர்; விடல்!
99


சோர்வற்ற அறிவை யுடையவர் ஆரவாரஞ் செய்யுமிடத்தும் மடைப்பள்ளியிலும் பெண்டிர்கள் உறையிடத்தும் நோக்கார், எடுத்துரையார், இல்லத்துட்புகார் : ஆதலால் நீ விடுக. 

கருத்துரை: ஆரவாரஞ் செய்யுமிடத்தைப் பார்த்தலும், மடைப்பள்ளியில் எடுத்துரைத்தலும், பெண்டிர்கள் உறைகின்ற இடத்துப் புகுதலும் ஆகா. 

ஒழுக்கத்தினின்று விலகியவர்
(பஃறொடை வெண்பா)

அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,
அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன், என்று
ஒன்பதின்மர் கண்டீர் - உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார்.
100


அறியாத தேசத்தான், வறியோன் மூத்தோன், சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர் தொழிலில் : தலைவைத்தவன், மணமகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மையா யுரைக்குமிடத்து ஆசாரமிலிகளாவர். 

கருத்துரை: அறியாத தேசத்தான் முதலிய ஒன்பதின்மருக்கும் ஆசாரக் கட்டுப்பாடில்லை. 

சிறப்புப் பாயிரம்


ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான் - தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.


ஆச்சாரக் கோவை முற்றிற்று.

Source:https://goo.gl/jTa9vf

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்