ஆய்வுக் கட்டுரைகள்-சம்பிக்கை நட்சத்திரம் கவிஞர் ஞா.சந்திரன்

கண்களில் கனவுகள், இதயத்தில் ஏக்கங்கள் என்று முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாய திகழக் கூடியவர் வித்தக்க் கவிஞர் பா.விஜய் அவர்கள்.
முதன் முதலாக கவிஞரின் நம்பிக்கையுடன் எனும் நூலைப் படித்தேன். நான் சோர்ந்தால், வீழ்ந்தால், அவமானப்பட்டால்.... எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இந்நூலை ஒருமுறை முற்றிலுமாக உணர்ந்து வாசிப்பேன். வாசித்தவுடன் என்னுள் புது உற்சாகம் ஊற்றெடுக்கும். ஊக்கத்தோடு எனது பணியை தொடருவேன். இன்றும் இது தொடர்கிறது. ஏனெனில் ஒவ்வொருவரும் (சு) வாசிக்க வேண்டிய நூல். இந்நூலின் உள் அட்டையில் நம்பிக்கைக்குரிய சிந்தனையாளர்களால் உருவானது இந்த உலகம் என்ற தலைப்போது சாதனையாளர்களின் பெயர்களோடு உலக வரைபடம் உள்ளது. இந்த உலக வரைபடத்தில் நமது பெயரும் எப்போது இடம் பெறப்போகிறது என்ற ஏக்கத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது.
இதோடு, நூலின் பிற்புற உள் அட்டையில் சாதனையாளர்களின் பெயர்களும் சாதித்தவைகளும் இடம்பெற்றுள்ளது. இதைக்கண்டு நாமும் சாதிக்க வேண்டும் என்னும் உந்து சக்தியை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறது.
இந்நூலில் ஒவ்வொரு பக்கமும் (க) விதைகளைத் தூவி நமக்குள் வளமையை ஏற்படுத்தி இருக்கிறார் கவிஞர்.
பாதுகாத்துவை
அவமானங்களை...
பின்னாளில் அதுதான் உன்னை இயக்கும்.
••••••••••••••••••••••••••••
எத்தனை முயற்சிகள்
வீணானாலும் பரவாயில்லை
ஒரு வெற்றியைப் பெற்றுவிடு
•••••••••••••••••••••••••••••
ஒவ்வொரு விடியலையும்
நம்பிக்கையுடன் எதிர்கொள்
••••••••••••••••••••••••••••••••
நம்பிக்கை என்பது
ஏழாவது அறிவு
அதிகபட்ச துணிவு
•••••••••••••••••••••••••••••••
இறங்கிப் போவதால்
என்றுமே நாம்
தாழ்ந்து போகமாட்டோம்
பள்ளத்தில் நதி
இறங்கிப் போகிறது
அதனால் அது மேடுகளில்
அசாமதாரணமாய் பாய்கிறது.
நீயும்
இறங்கிப் போ
ஏற்றமடைவாய்
•••••••••••••••••••••••••••••••••••••
உதாசீனப்படுத்துபவர்களை உதாசீனம் செய்....
தூக்கி வீசு அந்தக்
துரும்புகளை...
நீ இரும்பு மாலை
என்ன செய்யும் உன்னைச்
சில சிலந்தி வலைகள்.
கவிஞரின் பல நூல்களில் இதுபோன்ற நம்பிக்கை கவிதைகள் மனிதனை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. இந்நூலை படித்தவுடன் கவிஞர் பா.விஜய் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிப் பேசினேன். இரண்டு ஆண்டுகளாக நானும் கவிஞரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே தொலைபேசியில் எங்கள் நட்பை வளர்த்துக் கொண்டோம். என்னை நேரில் பார்க்காமல் நான் வியக்கும் வண்ணம் அன்பை நட்பை எனக்குத் தெரிந்து இவ்வளவு பிறபலமான மனிதர்கள் யாரும் பொழிந்தது கிடையாது. இனியும் இதுபோன்ற அன்புக்கு கட்டுப்பட்ட ஒரு மனிதர் பிறக்கப்போவதுமில்லை.
பிரபலங்கள் பெரும்பாலும் மக்களோடு மக்களாக கலப்பதில்லை. தனி மனிதனாகவே இருப்பார்கள். ஆனால் நமது கவிஞர் மக்களோடு மக்களாக உறவாடக் கூடியவர்.
நாங்கள் நேரில் சந்தித்து அறிமுகமாகியபோது ஒருவரை ஒருவர் வியந்து கொண்டோம். நான் கவிஞரைப் பார்த்து மெய் சிலிர்த்து போனேன். அந்த அளவிற்கு எளிமையாக இனிமையாக என்னோடு உறவாடினார். நட்பு பாராட்டினார். இவரது குடும்பத்தில் என்னையும் ஒருவனாக ஏற்று உபசரித்தார்கள். இவரின் குடும்பமே ஒரு பல்கலைக்கழகமாக்க் காட்சியளித்த்து. இன்றும் அந்த அன்பு, நட்பு தொடர்கிறது.
ஒருமுறை நான் பணியாற்றும் பள்ளியிலிருந்து சுமார் 200 மாணவர்கள், 10 ஆசிரியர்களோடு சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது மாணவர்கள் அனைவரும் கவிஞர் பா.விஜய் அவர்களை நாங்கள் பார்க்கவேண்டும் என ஆசைப்பட்டனர். இதைக் கேட்டவுடன் எனக்குள் சில நெருடல்.
இத்தனை மாணவர்களை கவிஞர் பார்க்க சாத்தியமா கவிஞர் என்ன நினைப்பாரோ என்று தோன்றியது. இருப்பினும் கவிஞரோடு இருந்த நட்பின் உரிமையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களது விருப்பத்தைத் தெரிவித்தேன். நான் பேசிய நேரத்தில் கவிஞர் திரு திரைப்படப் பாடல் பதிவில் பரபரப்பாக இருந்தார். எனது நட்பிற்காகவும் மாணவர்களது விருப்பத்திற்காகவும் பாடல் பதிவு நேரத்தை மாற்றி அமைத்துவிட்டு எங்கள் அனைவரையும் உடனடியாக தமது இல்லத்திற்கு வருமாறு பாச வரவேற்புக் கம்பளத்தை விரித்தார்.
நாங்களும் கவிஞரின் இல்லத்திற்கு சென்றோம். உண்மையில் கவிஞரும் கவிஞரின் குடும்பமும் காட்டிய அன்புக்கும் மரியாதைக்கும் உபசரிப்புக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் அடிமையானார்கள். நாம் உயர்ந்த இடத்திற்கு சென்று பிரபலமடைந்தால் இப்படி பண்பாளராக நடந்து கொள்வோமா என்று ஒருவருக்கொருவர் வினவிக் கொண்டது என்காதில் விழுந்தது.
மாணவர்களுக்கு இனிப்பு, காரம், குளிர்பானம் கொடுத்ததோடு அல்லாமல் கவிஞரின் நினைவாக அனைவருக்கும் நினைவுப் பரிசினை வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தனித்தனியாக ஒவ்வொரு மாணவரோடும் பொறுமையாக முகமலர்ச்சியோடு புகைப்படமும் எடுத்து சிரித்து பேசி மகிழ்ந்தார். அன்றுதான் நான் ஒரு பிரபலமான நல்ல மனிதரைக் காண முடிந்தது. இந்த உலகத்தில் வாழுகிற எண்ணற்ற மனிதர்களில் ஒரு சிறந்த மனிதராக வாழுகிறவர் என்அருமை நண்பர் கவிஞர் பா.விஜய் அவர்கள்.
தேசிய விருதுபெற்ற இவரது ஒவ்வொரு பூக்களுமே எனும் பாடல் பல பள்ளிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தாகவும் தேசிய கீதமாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மனிதன் தனது திறமையை, அறிவை, வாய்ப்பை மற்றவர்களுக்காகவே பயன்படுத்தி வாழவேண்டும். அத்தகைய சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்தான் நம் வித்தகக் கவிஞர்.
நண்பர்களுடன் எதிர்பார்ப்புகள் இல்லாமல் நெருங்கிப் பழகும் பண்பாளர். யாரைப் பார்த்தாலும் நேசக்கரம் நீட்டும் இனியவர். இவரைச் சுற்றி இளைஞர் பட்டாளம் எப்போதும் சூழ்ந்திருக்கும். இந்த இளைஞர் பட்டாளத்தில் மூத்த இளைஞர் கவிஞரின் பாசமிகு தந்தை. திருமிகு. பாலகிருஷ்ணன் அவர்கள். கவிஞரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் அங்குல அங்குலமாக ஊக்குவித்து ரசிப்பவர்.
என் மகன் மட்டும் வளர வேண்டும் வாழவேண்டும் என சுயநலத்தோடு எண்ணும் தந்தையர்கள் மத்தியில் கவிஞரின் நண்பர்கள் ஒவ்வொருவரையும் தனது மகனாக எண்ணி வாழ்வில் உயர வழிகாட்டும் கலங்கரை விளக்கு இவரது தந்தை.
தந்தையின் உயர்ந்த நல்லெண்ணங்களும் ஊக்குவிப்பும் கவிஞரின் வடாமுயற்சியும் சாதிக்கும் எண்ணமும் இன்று உயர்ந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
கவிஞரின் சிந்தனைகளில் வேகம்இருப்பது போலவே விவேகமும் இருக்கும். நேரத்தைப் பார்க்காமல் நேர்த்தியாக உழைக்கக் கூடியவர். இளைஞர்களை ஆற்றுப்படுத்தும் வழிகாட்டி, மாறுபட்ட குணம் கொண்டவர்களையும் மதிக்கும் மனம் கொண்டவர். மனித நேயத்தோடு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்.
திருவிழாக் கூட்டத்தில் பெற்றோரின் கையைப் பிடித்து நடக்கும் சிறு பிள்ளையைப் போல இவர்கரம் பற்றி நடப்பவர் ஏராளம். ஏனெனில் இவர் பிறருக்கு உதவுவதில் எப்போதும் தாராளம். ஆராவாரம் இல்லாமல் உதவும் அன்பு மனம் இவருக்கு ஈகைக் கென்றே பிறந்த்து இவரது இருகை.
எந்தப் பணியோடும் தன்னை இதமாகப் பெருத்திக் கொள்பவர். கடின உழைப்பால் தன்னை பதமாக நிலை நிறுத்திக் கொள்வார்.
அன்பு நண்பர் கவிஞர் பா.விஜய் அவர்களே
ஒளிரும் சூரியன் போல் உலகத்தில் நீர் வாழ்க
காற்று உள்ளவும் காவியமாய நீர் வாழ்க
உலகம் இவர் வழி செல்லட்டும்
எதிர்காலம் இவர் பெயர் சொல்லட்டும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்